செங்கம், நவ.12: செங்கம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி சமையலறை கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் அடுத்த மேல்செங்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்காக பள்ளி அருகே கடந்த 2004-2005ம் ஆண்டில் ₹3 லட்சம் மதிப்பில் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அதனை சரிவர மராமரிக்காததால் தற்போது இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை அகற்றி விட்டு புதிய சமையலறை கட்டிடம் கட்டித்தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் துறை சார்ந்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.