சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று

திருவண்ணாமலை, மே 8: காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கோவை வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.
கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் மணிகண்டன்(27), கூலித் தொழிலாளி. இவர், திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ படித்து வந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி அந்த சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியை காணாமல் பரிதவித்த பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, அப்போதைய இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தனிப்படை அமைத்து சிறுமியை மீட்டனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் மணிகண்டனை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று appeared first on Dinakaran.

Related Stories: