நெல்லை, நவ.12: குருவி குளம் அருகே தோப்புரெட்டியப்பட்டியை சேர்ந்த ஜெகஜோதி என்பவர் தனது குடும்பத்தோடு வந்து கலெக்டரிடம் அளித்த மனு: எனது கணவர் பாஸ்கர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் முதல் குழந்தைக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் வாடும் எங்களுக்கு குடும்ப வாழ்வாதாரம் கருதி குருவிகுளம் ஒன்றியத்தில் ஏதேனும் சத்துணவு திட்ட பணியாளர் வேலை அளித்திட கேட்டு கொள்கிறோம்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை அருகே துலுக்கர்குளத்தைச் சேர்ந்த செம்புக்குட்டி அளித்த மனு விபரம்: எனது 2வது மகன் மணிகண்டன், கத்தார் நாட்டிற்கு சென்று டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அங்கு எனது மகனை ஏதோ ஒரு காரணத்திற்காக கைது செய்துள்ளதாக தெரிகிறது. எனது மகன் குறித்த முழு விவரமும் எனக்கு கிடைக்கவில்லை. எந்த வருமானமும் இல்லாத சூழ்நிலையில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே எனது மகனை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.