குடும்ப தகராறால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

ஜெயங்கொண்டம், நவ. 12: ஜெயங்கொண்டம் அருகே குடும்ப தகராறால் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (எ) கோவிந்தராஜ் (43). வேளாண்மை துறையில் உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரடிகுளம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் லட்சுமிதேவி (39) என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் லட்சுமிதேவி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்த நிலையில் லட்சுமிதேவி காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டு உத்திரத்தில் உள்ள மின் விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு லட்சுமிதேவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமிதேவி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: