கூடுவாஞ்சேரி, நவ. 12: வண்டலூர் அருகே வீராணம் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 18 கிமீ கொண்ட, 4 வழிசாலையான இங்கு கொளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தோல் கம்பெனி எதிரே பழமையான தரைப்பாலத்தை அகற்றிவிட்டு பல லட்சம் மதிப்பில் புதிய தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.மற்றொரு புறம், மந்தகதியில் நடந்து வந்த பாலப்பணி, தற்போது முடிவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கவில்லை. இதனால், சாலையின் இருபுறமும் எதிரும், புதிருமாக வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர்.