பூந்தமல்லி, நவ.12 : பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வரும் கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் கோரிக்கை வைத்தனர். பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்குப்பத்திற்கும் திருவேற்காட்டிற்கும் இடையே கூவம் ஆறு ஓடுகிறது. இந்தப்பகுதியில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் சேரும் கழிவுகள், குப்பைகளை இரவு நேரங்களில் எடுத்து வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் கூவம் ஆற்றங்கரை மற்றும் ஆற்றுப்பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்று நீரும், நிலத்தடி நீரும் மாசு படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், உரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு திருவேற்காடு - பள்ளிக்குப்பம் சாலையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் இரவு நேரத்தில் வாகனங்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை எடுத்து வந்து கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.