ஊத்துக்கோட்டை, நவ.12: பெரியபாளையம் அருகே வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் முக்கால் சவரன் கம்மல், ₹1000 ரொக்க பணத்தை ஏமாற்றியவரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். பெரியபாளையம் அருகே எர்ணாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி - ரோசம்மாள் தம்பதிகள். இவர்கள் மண்பாண்டம் செய்யும் கூலித்தொழிலாளர்கள். பானை, சட்டி செய்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் டிப்டாப் ஆசாமி ஒருவர், ரோசம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். நீங்கள் பானை சட்டி செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் தானே என கேட்டுள்ளார். பின்னர், உங்களுக்கு வங்கியில் ரூ. ஒரு லட்சம் லோன் வந்துள்ளது. அந்த பணத்தை பெறவேண்டுமானால் ₹4750 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட மூதாட்டி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ₹1000 மட்டுமே உள்ளது என்றார். உடனே அந்த மர்ம நபர், நகை ஏதாவது இருந்தால் கொண்டு வாருங்கள். அதை அடகு வைத்து வங்கியில் கட்ட தேவையான பணத்தை எடுக்கலாம். பின்னர், லோன் வந்தவுடன் நகையை மீட்டுவிடலாம் என கூறியுள்ளார்.