செங்கம், நவ.8: செங்கம் அடுத்த வடமாத்தூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 118 பயனாளிகளுக்கு ஆர்டிஓ தேவி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வடமாத்தூர், குலால்பாடி, பெரியகுளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி, வடமாத்தூர் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். துயர் துடைப்பு தாசில்தார் சுகுணா, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தமிழரசி வரவேற்றார். ஆர்டிஓ தேவி 118 பயனாளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி நன்றி கூறினார்.