காரைக்குடி, நவ. 8: காரைக்குடி அழகப்பாபுரம் பகுதியில் தொடர்ந்த இரண்டு நாட்களாக ஓட்டுவீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருங்கி பொருட்கள் திருடப்பட்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். காரைக்குடி போலீஸ் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். போலீசார் பற்றாக்குறையால் தொடர் கண்காணிப்பு செய்ய முடியாத நிலை உள்ளது. ஊர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருந்தும் வழிப்பறி, டூவீலர்களை திருடி செல்வது போன்ற சம்பங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அழகப்பாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வள்ளலார் தெரு பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக திருட்டு கும்பல் ஓட்டு வீடுகளின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். ஒரே நாளில் 3 ஓட்டு வீடுகளில் உள்ளே இறங்கி கையில் கிடைத்ததை எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் அதேபகுதியில் திருட முயற்சி செய்துள்ளனர்.