உத்தமபாளையம் தாலுகாவில் ஒரே இடத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள்

உத்தமபாளையம், நவ. 7: உத்தமபாளையம் தாலுகாவில் ஒரே இடத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் பட்டியல் கணக்கிடப்படுகிறது. விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேனி மாவட்டத்தில் 22 டவுன் பஞ்சாயத்துக்கள், 8 ஊராட்சி ஒன்றியங்கள், 130 கிராம ஊராட்சிகள், 6 நகராட்சிகள் உள்ளன. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து 3 வருடத்திற்கு மேல் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தேனி எஸ்.பி. பாஸ்கரன் மாற்றம் செய்யப்பட்டார்.இதைத்தொடர்ந்து காவல்துறையில் டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ. மற்றும் போலீசார் மாறுதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தகுந்தார்போல பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் உள்ளாட்சி அமைப்புகளிலும் மாறுதல்கள் தொடங்கிவிட்டன. அனைத்து உள்ளாட்சிகளிலும் இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெவலில் பணிமாறுதல் நடைபெற்றுள்ளது.இதையடுத்து துறைவாரியாக இதற்கான பட்டியல்கள் தயாராகி உள்ளன. எனவே தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய மாநிலம் சார்ந்த துறைகளின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து இது நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்ட அளவில் 3 வருடம் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மாறுதல் விரைவில் வெளியாக கூடிய வாய்ப்புகள் உள்ளன’ என்றனர்.

Related Stories: