ஜெயங்கொண்டம், நவ.7: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமாமன்னன் முதலாம் ராஜேந்திரசோழனால் (கிபி-1012-1044) கங்கைவரை வெற்றி பெற்றதன் அடையாளமாக பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. ஐக்கிய நாடு சபையின் யுனெஸ்கோவால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டினர் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ்ட்சர்லாந்து, உள்ளிட்ட வெளிநாட்டினரின் மனதில் நின்ற சிற்ப கலைகள் இன்றளவும் பேசப்படுகன்றன.உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் கோயிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து காலை 9 மணி முதல் கோயிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு சாதம் அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணியளவில் தீபாராதனை செய்யப்படும். லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.