ஊட்டி, நவ.7: ஊட்டியில் உள்ள ஜிம்கானா கிளப் கைவசம் உள்ள 34 ஏக்கர் வன நிலத்தை மீண்டும் வனத்துறை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 50 ஆண்டுக்கு முன் இது போன்ற வனத்துறை நிலங்களை பல்வேறு துறைகள் மற்றும் தனியார் குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர். இதில், ஜிம்கானா கிளப் மிகவும் பழமையானது. கடந்த 1896ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டது. துவக்கத்தில் வேட்டையாடுபவர்கள் கூடும் கிளப்பாக இருந்தபோதிலும், நாளடைவில் கால்ப் விளையாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 78 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் புல் மைதானங்கள் மற்றும் கால்ப் போட்டிகள் நடத்தப்படும் பகுதிகளாக உள்ள போதிலும், ஒரு பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டுள்ளது. மேலும், குத்தகை பணம் பல ஆண்டுகளாக அரசு செலுப்படாத நிலையில், குத்தகை பாக்கி. ரூ.50 கோடியை தாண்டி விட்டது.