கும்பகோணம், நவ. 6: கடனை திருப்பி செலுத்தாததால் கும்பகோணம் அருகே வீட்டுக்கு பூட்டு போட தனியார் வங்கி அலுவலகம் முன் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.கும்பகோணம் அடுத்த மருத்துவகுடியை சேர்ந்த ரங்கசாமி மகன் இளங்கோவன் (29). தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது பெயரில் கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த கடனை மாதம்தோறும் ரூ. 6 ஆயிரம் வீதம் வங்கிக்கு திருப்பி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வங்கி கடனை செலுத்துவதில் தாமதப்படுத்தியுள்ளார். இதையடுத்து வங்கி ஊழியர்கள் சிலர் நேற்று மருத்துவகுடியில் உள்ள இளங்கோவனின் வீட்டுக்கு சென்றனர். இளங்கோவன் அங்கு இல்லாததால் செல்போனில் தொடர்பு கொண்டு கடனை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது இளங்கோவன் கால அவகாசம் கேட்டுள்ளார். இதில் உடன்படாத வங்கி ஊழியர்கள், இளங்கோவனின் வீட்டில் இருந்த பொருட்களை வெளியேற்றி வீட்டை பூட்டி வந்து விட்டனர்.