சிவகங்கை, நவ.5: சிவகங்கை மாவட்டத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்தை கூடுதல் விலைக்கு விற்றால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டத்தில் நெல் நடவு மற்றும் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்து தனியார் விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. உரத்தினை அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தவறினால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன் பிரிவு 3ஐ மீறிய செயலுக்கு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955, பிரிவு7(1)ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.