சத்தியமங்கலம், நவ.5: சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மலைப்பகுதிக்கு செல்வதற்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள இச்சாலை வழியாக பயணிக்க வேண்டும். தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தமிழக பகுதியில் உள்ளதால் சாலை நன்கு பராமரிக்கப்படுகிறது. காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து கர்நாடக மாநிலம் சுவர்ணாவதி அணை வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதோடு தற்போது பெய்த மழையால், மிகவும் பழுதடைந்து வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.