வெள்ளக்கோவில்,நவ.5: வெள்ளக்கோவில் வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு ரூ.6000, மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக இணைய வரும் 8ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இதுவரை இத்திட்டத்தில் சேர்ந்திடாத விவசாயிகள் வரும் 8ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். வெள்ளகோவில் வட்டாரத்தில் மொத்தம் 17 வருவாய் கிராமங்கள் உள்ளது. தற்போது புதிதாக விண்ணப்பிக்க உள்ள விவசாயிகள் இக்கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரிலோ தங்களது விண்ணப்பங்களை கொடுக்கலாம். விவசாயிகள் இணைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் (தொலைபேசி எண்ணுடன்) வங்கி புத்தக நகல் மற்றும் தங்களது நிலத்திற்கான சிட்டா ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். தற்போது இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயர் சரி செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.