திருப்பூர்,நவ.5: தீபாவளி பண்டிகைக்கு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்ற தென் மாவட்ட, வட மாநில தொழிலாளர்கள் 40 சதவீதம் பேர் திருப்பூர் திரும்பாததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூரில் நூல்மில், நிட்டிங், சலவை பட்டறை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து கட்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக பின்னலாடை உற்பத்தி முழுமையடைகிறது. ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், சுமார் 6 ஆயிரம் சிறு, குறு ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 27ம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்தது. ஆண்டுதோறும் பனியன் கம்பெனி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கம். பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடந்த மாதம் 25ம் தேதி தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கி விடுமுறை அளித்தது.