திருச்சி, நவ.1: காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 19வது கூட்டம் முதல் முறையாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமாரை சந்தித்து விவசாய அமைப்பினர் மனு அளித்தனர். தமாகா மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் அளித்த மனுவில், ‘கர்நாடகா மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்கக் கூடாது. காவிரி ஆணையம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் ஒதுக்கீட்டை நாள்தோறும் வழங்க வேண்டும். குறிப்பாக கோடையில் ஜனவரி -ஜூன் வரை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சென்னை உள்பட 24 மாவட்டங்களை சேர்ந்த 5 கோடி மக்களின் நீராதாரமாக காவிரி உள்ளதை மேலாண்மை வாரியம் கருத்தில் கொள்ளவேண்டும். கர்நாடகா அரசு மழைக்காலங்களில் திறக்கும் உபரிநீரை வாரியம் கணக்கில் எடுக்கக்கூடாது. காவிரி ஆணையம் நீர் பங்கீட்டை நடைமுறைப்படுத்த கர்நாடகாவில் உள்ள அணைகளை மாநில அரசிடமிருந்து ஆணையம் தன்வசப்படுத்த வேண்டும். ஆணைய ஒதுக்கீட்டின்படி ஆணையமே நீர் பங்கீட்டு பணியை தினசரி ராணுவம் மூலம் மேற்கொள்ள வேண்டும். காவிரி ஆணைய தலைமை அலுவலகம் பெங்களூருவில் அமைக்க வேண்டும். அதன் மேற்பார்வை அலுவலகம் திருச்சியில் அமைக்க வேண்டும். காவிரி ஆணைய கூட்டம் காவிரி டெல்டாவில் நடத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.