போடி, நவ.1: தமிழக, கேரளா எல்லைகளில் தொடர் கொட்டும் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி அருகே தமிழக, கேரளா எல்லையான மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து செல்லும் தண்ணீர் போடி, தேனி கடந்து மூல வைகையில் இருந்து ஆண்டிபட்டி வைகை அணையில் கலந்து வருகிறது. போடிமெட்டு, குரங்கணி, டாப்ஸ்டேஷன், சென்ட்ரல், முதுவாக்குடி, கொழுக்கு மலை போன்ற மலைப்பகுதிகளிலிருந்து வரும் வெள்ளம் ஒட்டு மொத்தமாக சாம்பலாறு ஊற்றின் தடுப்பணையில் நிரப்பி மறுகால் பாய்ந்து வருகிறது.