பழநி, நவ. 1: பழநி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி. இவ்விழா கடந்த அக்.28ம் தேதி மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (சனி) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதிகாலை 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயிலில் சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்பின்பு சன்னதி நடை அடைக்கப்படும்.