நாகை, நவ.1: நாகை சிக்கல் சிங்காரவேலவர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (1ம் தேதி) நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிக்கல் சிங்காரவேலவர் கோயில் ஆகும். கந்த சஷ்டி விழாவின்போது சிங்காரவேலவர் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை வேறு எங்கும் காண முடியாது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம், சுந்தர கணபதிக்கு அபிஷேக ஆராதனை ஆகியவை நடந்தது. 28ம் தேதி மாலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிங்காரவேலவர் தங்க மஞ்சத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. 29ம்தேதி காலை நாகாபரண காட்சியும், இரவு பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. 30ம் தேதி காலை மோகனாவதார காட்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதியுலாவும் நடந்தது. நேற்று (31ம் தேதி) காலை வேணுகோபால அவதார காட்சியும், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதியுலாவும் நடந்தது.