தோகைமலை, நவ. 1: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்தலூர் வடக்கு ஊராட்சியில் உள்ள 6வது வார்டில் 2ம் உலகப்போரில் கலந்து கொண்ட 82 வீரர்களின் வாரிசுதாரர்கள் வசித்து வருகின்றனர். 1947க்கு முன்பு 2ம் உலகப்போரில் பங்குபெற்ற 82 வீரர்களுக்கு 1401 என்ற மத்திய அரசாணை மூலம் 12.5.1947ல் வீரமானியமாக ஒவ்வொரு வீரருக்கும் தலா 13 சென்டில் வீட்டுமனைகளும், 4 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலமும் அப்போது இருந்த பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி நெய்தலூர் ராஜன்காலனி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
பிரிட்டிஷ் அரசு வழங்கிய 82 குடியிருப்புகளுக்கும் சுமார் 45 அடி அகலத்தில் வீதிகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் 1947ல் அமைக்கப்பட்ட வீதிகளுக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த 68 ஆண்டுகளாக முன்னாள் ரானுவவீரர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 2014ம் ஆண்டு 1 வது மற்றும் 2 வது தெருவில் மெட்டல் சாலை மட்டுமே அமைக்கப்பட்டது.