திருவள்ளூர், நவ. 1: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் நேற்று காலை புறநகர் மின் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். அரக்கோணம்-சென்னை ரயில் மார்க்கத்தில் வேப்பம்பட்டு- திருநின்றவூர் ஆகிய ரயில் நிலையங்கள் இடையே புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் காலை 9 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை நோக்கி செல்ல வேண்டிய புறநகர் மின் ரயில்கள் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டன. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள், கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.