திருவள்ளூர், நவ. 1: நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாம்பு புற்றிற்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். தீபாவளி முடிந்த ஐந்தாம் நாளில் அம்மன் கோயில்கள் மற்றும் புற்றுக் கோயில்களில் நாகசதுர்த்தி விழா நடைபெறுவது வழக்கம். நேற்று நாக சதுர்த்தி என்பதால் திருவள்ளூர் மூங்காத்தம்மன் கோயில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோயிலில் பெண் பக்தர்கள் மஞ்சள், குங்குமமிட்டு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து புற்றுக்கு பால் ஊற்றி, முட்டை வைத்து வழிபட்டனர். இதேபோல் ராஜாஜிபுரம் பவானி அம்மன் கோயில் தீர்த்தீஸ்வரர் கோயில், ஜெயா நகர் வல்லப விநாயகர் கோயில், வேம்புலியம்மன் கோயில், கோலம் கொண்ட அம்மன் கோயில், திரவுபதி அம்மன் கோயில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், திருப்பாச்சூர் செல்லியம்மன் கோயில், பேரம்பாக்கம் அங்காளம்மன் கோயில், அரண்வாயல் பூங்காவனத்தம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் மற்றும் புற்று கோயில்களில் நாக சதுர்த்தி விழா நடந்தது. அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.