திண்டுக்கல், அக். 31: திண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.வேலைவாய்ப்பு துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களின் சுயவிபர குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளி நகல் (ஜெராக்ஸ்) களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் மத்திய, மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.