நாமக்கல், அக்.31: அரசு மருத்துவர்கள் 6வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் 150 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், டாக்டர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 6வது நாளாக நீடித்தது. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.