முத்துப்பேட்டை, அக்.31: முத்துப்பேட்டை பேரூராட்சியின் 18வது வார்டு பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் 18வது வார்டு பகுதியை சேர்ந்த ரயில்வே எதிர்புறம் சாலை, பழைய மின்சார நிலையம் சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதேபோல் ஏராளமான காலனி வீடுகளும் உள்ளது. இங்கு இப்பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி நிர்வாகம் இதுநாள்வரை செய்து கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதி முழுவதும் சாலைகள் படுமோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் படுங்குழியாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் முறையான வடிகால் வசதியும் கிடையாது. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கி மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.