பாடாலூர் அருகே பேரிகார்டில் பைக் மோதிவாலிபர் பலி, ஒருவர் காயம்

பாடாலூர், அக்.27: பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப் பட்டிருந்த பேரிகார்டில் பைக் மோதி வாலிபர் இறந்தார். ஒருவர் காயமடைந்தார். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபிநாத் (17). அதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜதுரை (22). இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் உள்ள சினிமா தியேட்டரில் இருவரும் படம் பார்த்துவிட்டு பாடாலூருக்கு பைக்கில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரை பிரிவு ரோடு அருகே வரும்போது சாலையில் வைத்திருந்த பேரிகார்டில் பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். கோபிநாத் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: