திருச்சி, அக்.25: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 41 இலங்கை தமிழர்கள், நைஜீரியாவை சேர்ந்த 4 பேர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 48 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஸ்டீவன்பால் அபுச்சி(31) என்பவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் திருச்சி முகாம் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஜூலை 19ம் தேதி காலை சிறையில் சுவற்றின் அருகே இருந்த 25 அடி உயர பெரிய மரத்தில் ஏறி, சிறைக்கு வௌியே உள்ள மற்றொரு மரத்தின் வழியாக இறங்கி கொட்டப்பட்டு இந்திரா நகர் வழியே ஸ்டீவன் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் தனிப்படை போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்டீவன் பால் அபுச்சி டெல்லியில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் செப்.13ம் தேதி டெல்லி சென்று அவரை கைது செய்தனர்.