சிவகங்கை, அக். 24: பெரியாறு நீரை பாசனமாக கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு உரிய பங்கு நீர் வழங்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு மிகக்குறைவான அளவு நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு ஆக.29 முதல் பெரியாறு நீர் இருபோக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. அக்.9 முதல் ஒரு போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படுவது குறித்து மேலூர் பிரிவு அதிகாரிகள் எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கடைமடை பகுதியான சோழபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் திறக்கப்படும் என அறிவித்தனர்.