மாநில சதுரங்க போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு 5வது ஆண்டாக தொடரும் சாதனை

மேலூர், அக். 24: மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தொடர்ந்து 5ம் ஆண்டாக மேலூர் அருகில் உள்ள செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்று அசத்தி உள்ளனர். பள்ளி கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் மதுரை டிவிஎஸ் சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அ.செட்டியார்பட்டி அரசு ஒன்றிய பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவி மரியஜென்சி இரண்டாம் இடமும், சோலையம்மாள் மூன்றாம் இடமும் பெற்றனர்.வெற்றி பெற்ற இவ்விரு மாணவிகளும் பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவில் ஈரோட்டில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வு பெற்றனர். தொடர்ந்து 5ம் ஆண்டாக இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மாநில அளவிலான பள்ளி கல்வி துறை சார்பில் நடத்தப்படும் சதுரங்க போட்டிக்கு தகுதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்று திரும்பிய மாணவிகளை அ.செட்டியார்பட்டி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் கல்வி துறை அதிகாரிகள், அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டி வரவேற்றனர்.

Related Stories: