திருச்சி, அக்.24: தமிழக அரசை கண்டித்து நாளை (25ம்தேதி) முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திடபோவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவர்களும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) நீண்ட நாட்களாக தொடர் போராட்டங்கள், மனித சங்கிலி, ஊர்வலம், தர்ணா, தொடர் உண்ணாவிரதம் என பல வகையில் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ஆக. 27 அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதில் 14,000 மருத்துவர்கள் பங்கேற்று பணிகளை புறக்கணித்தனர். அன்று நடந்த பேச்சுவார்த்தையில் 6 வார காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. பின்பு இடைத்தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதாக கூறப்பட்டது.