பொன்னேரி, அக். 24: மீஞ்சூர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதால் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் - பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆந்திராவுக்கு பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் என ஏராமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், மீஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீஞ்சூர் பஜார் பகுதிக்கு தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க வருகின்றனர். இதனால் மீஞ்சூர் பஜார் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மீஞ்சூர் - பொன்னேரி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை விட சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில இந்த மாடுகள் சாலையில் படுத்திருப்பதால் தொடர் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மழைக்காலம் என்பதால் மாடுகள் அனைத்தும் சாலையில் சுற்றித் திரிகின்றன. அந்த பகுதியில் மின் விளக்குகள் எரியாததால் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகமும், மீஞ்சூர் காவல் துறையும் பிடித்து அப்புறப்படுத்தவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.