திருவள்ளூர், அக். 18: டெங்கு கொசு புழு உற்பத்திக்கு வழிவகுத்த திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு நகராட்சி அதிகாரிகள் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். திருவள்ளூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் 27 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர் கோவிந்தராஜ், ஆய்வாளர்கள் ரமேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று, ‘டெங்கு’ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாளி உட்பட பல இடங்களில் டெங்கு கொசு புழு வளர்ந்துள்ளதை கண்டுபிடித்து அழித்தனர்.
அதை தொடர்ந்து, டெங்கு கொசு புழு உற்பத்திக்கு வழிவகுத்த திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதற்கான ரசீதை நிலைய மேலாளரிடம், நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி வழங்கினார். இதேபோல் டெங்கு கொசு புழு இருக்கும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.