திருவள்ளூர், அக். 18: திருவள்ளூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது தண்டலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை, காலனி ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனைக்கும் திருவள்ளூர், கடம்பத்தூர் அல்லது பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், கிராமத்தில் இருந்து செல்ல பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே இயங்கி வந்த மினி பஸ்சும் நிறுத்தப்பட்டுவிட்டது. கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி கடம்பத்தூர் செல்ல வேண்டியுள்ளது.