ஈரோடு, அக்.17: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, இனிப்பு மற்றும் காரம் உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பான தயாரிப்பு முறை குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார உணவுப்பொருட்கள் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர், கலெக்டர் கதிரவன் பேசியதாவது: உணவு பொருள் தயாரிப்பு அளவை பொருத்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் உணவு பொருட்களை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.