மாமல்லபுரம், அக். 16: மாமல்லபுரத்தில் 100 ஆண்டுகளை கடந்த குறநாட்டு குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில், திருக்குளத் தெருவும், ஒத்தவாடை குறுக்கு தெருவும் இணையும் இடத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான குறநாட்டு குளம் உள்ளது. இந்த குளத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதால் செடி, கொடிகள் முளைத்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், பாம்பு, தேள், பூரான் உள்பட பல்வேறு விஷப் பூச்சிகள் குளத்தில் அதிகமாக உள்ளன. இந்த விஷப் பூச்சிகள் அடிக்கடி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் தூக்கம் கெட்டு பயத்துடனே தினமும் வாழ்கின்றனர். மேலும், இந்தக் குளத்துக்கு அருகில் உள்ள ஓட்டல், ரெஸ்டாராண்ட், லாட்ஜ் ஆகியவைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த குளத்தில் விடப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த கழிவுநீர், குளத்தில் விடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது.அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், துர்நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி சென்று வருகின்றனர். கழிவுநீரை குளத்தில் விடப்படுவதால் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்தாலும், அந்த நீரும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. இதையொட்டி அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.