பெரம்பலூர், அக். 15: பெரம்ப லூரில் பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய டெங்கு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாந்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் இருக்க தண்ணீரை கொசு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் கொசுப்புழு உற்பத்தி ஆகாதவாறு உடைந்த மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் சிரட்டை, உரல், டயர் மற்றும் உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி நீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பேனர்களை மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர்.