தக்கலை, அக். 15: குமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து எஸ்ஐ டைட்டஸ் ஜாய்சன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற பரத் (26), ஜேசு ரக்ஸன் (23) ஆகியோர் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்தனர். பரத், பைக்கை ஓட்டி வந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதையடுத்து போலீசார் சைகை செய்து பைக்கை நிறுத்தி சாவியை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர்கள் பைக்கில் வேகமாக தப்ப முயன்றனர். இதனால் அங்கிருந்த போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பரத் மற்றும் ஜேசு ரக்ஸன் ஆகியோர் திடீரென போலீசாரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதுடன், எஸ்ஐ ஜாய்சனை சரமாரியாக தாக்கி, பைக்கில் இருந்த சாவியை எடுத்து கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.