திருத்தணி, அக். 15:திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், டெங்கு குறித்தான விழிப்புணர்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு வரவேற்றார். இதில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் பங்கேற்று பேசியதாவது: ஊராட்சிகளில் பரவும் மர்ம காய்ச்சல் தடுப்பதற்கு சுகாதார துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பெரும்பாலான ஊராட்சிகளில் எங்கள் பணியாளர்கள் செல்லும் இடங்களில் கிராமமக்கள் சரியான ஒத்துழைப்பு தருவதில்லை. இதுபோன்ற நேரத்தில் அந்தந்த ஊராட்சி செயலர்கள் களத்தில் இருந்தால் கொசு ஒழிப்பு பணிகளை முழுமையாக செய்ய முடியும். மேலும், டெங்கு குறித்தான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த முடியும். மேலும், பம்ப் ஆப்ரேட்டர் கள் தினமும் குளோரின் கலந்த குடிநீரை தெருக் குழாய்களில் வினியோகம் செய்ய வேண்டும். மாதத்தில் இரு முறை குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடரால் தூய்மைப்படுத்திய பின் தண்ணீரை ஏற்ற வேண்டும்.