பொன்னேரி, அக்.15: பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கத்தில் மழைநீர் கால்வாயை அடைத்து தனியார் சிலர் கட்டிடம் கட்ட முயன்றதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமப்புற பகுதியில் இருந்து மழைகாலங்களில் வெள்ளநீரும், குளம், குட்டைகளில் உள்ள உபரிநீரும் வெளியேற மழைநீர் கால்வாய் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியை ஆக்கிரமித்து காம்ப்ளக்ஸ் கட்டும் நோக்கில் சுற்றுசுவர் கட்டுவதற்கான பணிகளை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிலர் துவக்கினர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கால்வாயை அடைத்து மழைநீரை தடுக்கும் இப்பணியினை கைவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அதிகாரிகள் செய்த சமரசத்தால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பணியினை தொடரக்கூடாது என அதிகாரிகள் தரப்பில் நிபந்தனையும் வைக்கப்பட்டது.