கோவை, அக். 10:கோவை மாவட்டத்தில் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பித்து உதவித் தொகைக்காக காத்திருக்கின்றனர் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், சமூகநலத் துறையின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரமும், பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரமும் திருமண உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளியப் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பு மாதம் வரை 4 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஒராண்டுகளுக்கு மேலாகியும் உதவித்தொகை கிடைக்காமல் பெண்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.