புழல், அக். 10: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் உள்ளது. இதனால் லட்சுமிபுரம், மேட்டுப்பாளையம், சரத்துகண்டிகை, எரான்குப்பம், பெரியார் நகர், வடுகர் காலனி, பழைய பம்மதுகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் லட்சுமிபுரம் ஆலமரம் பகுதிக்கு வந்து காத்திருந்து மாநகர பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.இங்கு பல ஆண்டுகளாக பேருந்து நிழற்குடை அமைக்க கோரி சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் மழை, வெயில் காலங்களிலும் அப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர்.