ராமகிருஷ்ணபுரம் பகுதியில் ஜல்லிகற்கள் கொட்டியதோடு தார்ச்சாலை பணி நிறுத்தம்

கரூர், அக். 9: கரூர் ராமகிருஷ்ணபுரம் சாலையில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம், காமராஜபுரம், செங்குந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலை அமைப்பதற்காக சாலைகளில் உள்ள கற்கள் பெயர்க்கப்பட்டு, புதிதாக ஜல்லிக் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதே போல் கரூர் ராமகிருஷ்ணபுரம் செல்லும் சாலையை தரம் உயர்த்தும் வகையில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியை சுற்றிலும் அதிகளவு ஜவுளி நிறுவனங்கள் உள்ளதால் வாகன போக்குவரத்தும் அதிகளவு உள்ளது. எனவே அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி, ராமகிருஷ்ணபுரம் பகுதியில் விரைந்து தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: