திருக்கனூர், அக். 9: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், சன்னியாசிகுப்பம் உள்ளிட்ட சில கிராமங்களில் குப்பை கொட்டுவதற்கான இடம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. சமீபத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் ஜெயக்குமார், கடந்த சில வாரங்களாக அந்தந்த பகுதி மக்களிடையே கலந்தாய்வு நடத்தி திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், கலிதீர்த்தாள்குப்பம் பேட் போன்ற பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கலிதீர்த்தாள்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. அதில் ஊர் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளின்படி அக்கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு பின்புறமுள்ள அரசு புறம்போக்கு இடத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே அந்த இடத்தை அனைவரும் சென்று பார்வையிட்டனர்.