அரியலூர், அக். 4: சம்பா மற்றும் தாளடியில் வரப்பு பயிர்களை சாகுபடி செய்து உபரி வருவாய் ஈட்டலாம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பூச்சிநோய் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக வரப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம். காய்கறி, தீவனப்புல், உளுந்து, துவரை போன்ற பயறுவகை பயிர்கள், மலர்பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் நெல் வயலில் உகந்த சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டு இயற்கை எதிர்பூச்சிகள் பெருகி ஒரு சமநிலையை பேணுவதன் மூலம் நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.வரப்புபயிர் சாகுபடி செய்வதால் பரப்பில் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது. வரப்பில் உள்ள களைகள் தான் சாகுபடி இல்லாத காலங்களில் பூச்சிகளுக்கு மாற்று வாழ்விடமாக அமைகிறது. வரப்புப்பயிர் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.