மஞ்சூர், அக்.2: மஞ்சூர் மேல்பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளார்கள். மஞ்சூர் மேல்பஜார் பகுதியானது அப்பர்பவானி, கிண்ணக்கொரை, இரியசீகை, தாய்சோலா, பிக்கட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி, பேரூராட்சி அலுவலகம், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. இதனால் சாதாரணமாகவே இந்த சாலையில் எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படும். மஞ்சூர் கீழ்பஜாரில் இருந்து கரியமலை பிரிவு வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.