பெரியகுளம்,அக்.1: பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் கனமழை காரணமாக நீர் வரத்து இருக்கும். கும்பக்கரை அருவி ரம்யமான இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி அனைத்து பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைவாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மாலை மற்றும் இரவுநேரத்தில் பரவலாக பெய்த கனமழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து துவங்கியது. இந்நிலையில் தற்போது அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு சீராகும் வரை தடை நீடிக்கும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதே போன்று பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வரகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.