தோகைமலை, அக். 1: கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி குப்பாச்சிபட்டி பகுதியில் குளித்தலை- மணப்பாறை மெயின் ரோட்டின் குறுக்கே பாப்பக்காபட்டி பெரியகுளத்தின் ஆற்றுவாரி செல்கிறது. பெரியகுளத்தின் ஆற்றுவாரி சிவாயம் குளத்திற்கு செல்வதால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் பருவமழையின் போது பாப்பக்காபட்டி பெரியகுளத்தில் இருந்து சிவாயம் குளத்திற்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் பாலம் போதுமானதாக இல்லாமல் இருந்து உள்ளது. இதனால் குப்பாச்சிபட்டி அருகே பாப்பக்காபட்டி பெரியகுளத்தின் ஆற்றுவாரி செல்லும் இடத்தில் பெரிய பாலம் அமைக்கப்பட்டது.மேலும் குளித்தலை- மணப்பாறை மெயின்ரோட்டில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் பாலம் அகலப்படுத்தப்பட்டது. தொடர்நது பாலத்தின் பக்கவாட்டில் உயரமான கரைகள் இருந்ததால் வாகன விபத்துகளை தடுக்க பாலத்தை ஒட்டி உள்ள கரை பகுதிகளில் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட பின்பு தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.