துறையூர், செப்.30: பாலப்பணிகள் நடப்பதால் துறையூர் அருகே மாராடி கிராமத்திற்கு கடந்த ஒரு மாதமாக அரசு பஸ்கள் வராமல் 1 கி.மீக்கு முன்பே இறக்கிவிட்டு மாற்று வழித்தடத்தில் சென்றுவிடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.துறையூரிலிருந்து மாராடி கிராமம் வழியாக கோட்டப்பாளையம், பி.மேட்டூர் வரை அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போது மாராடியிலிருந்து கோட்டப்பாளையம் செல்லும் சாலையில் 3 பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதமாக இப்பணி விட்டுவிட்டு நடைபெறுகிறது. தற்போது கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் செல்லும் அரசு பஸ்கள் கிராமத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். பாலம் வேலை செய்யும் பகுதியில் மாற்று வழிச்சாலை பகுதியில் சரியான முறையில் சாலை அமைக்காமல் மண்ணை மட்டும் கொட்டப்பட்டு இருந்ததால் குண்டும், குழியுமாக ஆனதால் பேருந்துகள் செல்ல முடியாமல் தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. தற்போது மழை பெய்ததால் அந்த வழித்தடத்தில் செல்ல முடியாமல் டிரைவர்கள் தவித்தனர்.